Monday 30 November 2015

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 11

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 11

அத்தியாயம் 11 பிரம்மம்-4

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


                               ஒன்னொன்னாயி நினைக்கும் ஜனங்கள்க்கு

                                              ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவுமாய்
                                                ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
                                                நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்

“ ஒன்றையே பலதாக காணுகின்ற பாமர ஆத்மாக்கள், எல்லா பந்தங்களையும் அற்றுப்போன பின் தெரிந்து கொள்கிறார்கள்: “இந்த பிரபஞ்சமே மித்யை; இதை படைத்தைதே தனது அவித்யை தான்; உண்மையில் இருப்பது ஒன்றே” என்று சொல்கிறார் பூந்தானம் என்று மேலோட்டமாக பார்க்கும்பொழுது தெரிகிறது. ஆனால் சற்று ஆழமாக சிந்த்தித்துப் பார்த்தால் அவர் கூறிய
ஒன்னொன்னாயி நினைக்கும்” என்ற வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருப்பது தெரிய வரும்.இந்த பக்தி கவிஞர் உபனிஷத்துக்களின் சாரத்தை இந்த இரு வார்த்தைகளில் சுட்டிக்காட்டுகிறார் என்று புரியவரும் குறிப்பாக ‘பிரஹாதரண்ய உபனிஷத்தில்” வரும் ‘அஜாதசத்ரு-கார்க்யர் சம்வாதத்தில் வரும்   விசார மார்க்கத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறார் ஞானப்பானாவின் ஆசிரியர் பூந்தானம்.
நாமும் இந்த சந்தர்ப்பத்தில் பிரஹதாரண்ய உபனிஷத்தில் கூறியிருப்பதை சற்றே பார்ப்போம்.
ஒரு முறை கார்க்யர் மிகுந்த அறிவுள்ளவர், பேச்சுத்திறைமையுள்ளவர், ஆனால் தன் அறிவின் மீது கர்வம் கொண்டவர் வாரணாசி மன்னர் அஜாதசத்ருவை காண வந்தார்

                                  ‘ மன்னா, நான் உனக்கு பிரம்மத்தைக் குறித்து கற்பிப்பதற்காக வந்துள்ளேன்.” என்று ஒரு நீண்ட முகவுரைக்குப்பின்  கூறினார்

மன்னனும் மிகுந்த பணிவுடன், ’ இந்த உபகாரத்திற்கு ஆயிரம் பசுக்களை பரிசாகத் தருகிறேன். ஏனென்றால் இக்காலத்தில் அறிஞர்களும் ஞானிகளும் ஜனகரின் அரண்மனைக்குத்தான் இம்மதிரி சம்வாதத்திற்கு செல்கிறார்கள்.   நீர் என்னை மதித்து வந்துள்ளீர். தங்கள் விளக்கங்களை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்.” என்றார். ( பி.உப. 2.1.1 )
அந்தக் காலத்தில் பசுக்களை பரிசாக கிடைப்பது மிகவும் பெரிதாக மதிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த ஒரு சுலோகத்தின் மூலம் குறைகுடம் எப்படி கூத்தாடும் என்பதை சூசகமாக உபனிஷதாச்சாரியன் சுட்டிக்காட்டுகிறார். ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதுகையில் கார்க்யரின் அஹந்தைக்கு பிரம்மத்தைக் குறித்துள்ள அவரது அரைகுறை ஞானம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
அஜாதசத்ரு ஜனகரை ஏன் குறிப்பிடுகிறார் என்றால் அந்த காலகட்டத்தில் மிதிலையின் மன்னனான ஜனகர் ஒரு ராஜ ரிஷியாக மதிக்கப்பட்டு வந்தார்.அவர் வேத வேதாந்தங்களில் கரைகண்டவர்.அவரோடு சம்வாதம் செய்வதை பெருமையாகக் கருதினார்கள் அக்காலத்து அறிஞர்கள்.
கார்க்யர் கூறினார்,” ஏதொரு புருஷன்  சூரியனிலும் நமது கண்களிலும் ஒரே நேரத்தில் இருந்து கொண்டிருக்கிறானோ, எவனொருவன் நமது கண்கள் வழியாக நம் தேகத்தில் புகுந்து, நமது இதயத்தில் வசித்து வருகின்றானோ,எவனொருவன்  செயலாற்றுபவனாகவும் செயலின் பலனை அனுபவிக்கின்றவனாகவும் இருக்கிறானோ அந்த பரம புருஷனை நான் பிரம்மம் என்று தியானிக்கின்றேன்.”
அஜாதசத்ரு உடனடியாக சொன்னான், “ நேதி, நேதி,( இல்லை, இல்லை).பிரம்மம் ஸ்வயம் பிரகசிக்கின்றது;அது எதிலிருந்தும் வருவதில்லை.அது எல்லாவற்றிற்கும் மேலானது. அப்படிப்பட்ட பிரம்மத்தை தியானம் செய்கிறவன் பிரபஞ்சத்திலுள்ளா எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலானவனாகிறான்.” (பி.உப.2.1.2)
கார்க்யர் சொன்னது முழுவதும் தவறில்லை. பிரம்மம் எல்லோருடைய உள்ளிலும் வசிக்கின்றது.ஆகவே எல்லாயிடத்திலும் இருக்கிறது.ஆனால் அது மட்டும் அதன் இயல்பல்ல.பிரம்மனை காண்பதற்கு கண்கள் வேண்டுமென்பதில்லை; சூரிய ஒளியும் தேவையில்லை.
அறிஞர் தொடர்ந்தார்:” சந்திரனிலும் நமது மனதிலும் இருப்பது பிரம்மம்.”
மன்னர் மறுத்தார், “  நேதி,நேதி இல்லை, இல்லை, பிரம்மம் எல்லையில்லாதது, சுத்த சத்தானது,அதை தியானம் செய்பவர்களுக்கு எந்த குறையும் இராது.அவர்கள் என்றும் நித்திய ஆனந்தத்தையுடையவர்களாயிருப்பார்கள்.”
பிரம்மம் நம் மனதில் உள்ளான் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் ஞானேந்திரியமான மனதால் அதை அறிய முடியாது.
கார்க்யர் தொடர்ந்தார்,” எவனொருவன் ஆகாயத்தில் தோன்றும் மின்னல்களிலும் நமது இதயத்திலும் ஒரே நேரத்தில் வசிக்கின்றானோ அவனே பிரம்மம்.”
அஜாதசத்ரு மறுத்தார்,” இல்லை இலை. பிரம்மன் எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. அதை மின்னல் போன்ற ஒரு தோற்றத்துடன் ஒப்பிடலாகாது.”
கார்க்யர்:” ஒரே நேரத்தில் ஆகாயத்திலும் நமது இதயத்திலும் இருப்பவன் பிரம்மன்”
மன்னர்: “ இல்லை, இல்லை.பிரம்மன் ஆகாயத்தில் மட்டுமல்ல, எங்கேயும் எல்லாயிடத்திலும் இருப்பவன் அவன் சர்வவியாபி.” மன்னரின் கூற்று ‘பிரம்மனுக்கு எல்லை கிடையாது; அவன் இங்கிருக்கிறான், அங்கிருக்கிறான் என்றெல்லாம் கூற முடியாது.அவன் எங்குமிருக்கிறான்’ என்பது. பிரகலாதன் கூறியது போல் அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்.
இப்படியே கார்க்யர் பிரம்மனின் ஒவ்வொரு குண நலன்களை கூற அஜாதசத்ரு அவை மட்டுமல்ல பிரம்மன் என்று கூறிக்கொண்டே வந்தான்
கடைசியில் கற்றுக் கொடுக்க வந்த கார்க்யர் தன்னுடைய அறிவு முழுமையடையாதது என்று ஒத்துக் கொண்டு நிஜமான பிரம்மனை எங்கே காண்பது என்று கேட்கிறார்.கற்றுக்கொடுக்க வந்த குரு, கற்றுக்கொள்ள ஆவலுடைய முமுக்சு-மாணாக்கனாகிறான்.
அஜாதசத்ரு எனும் அந்த ஞானி கார்க்யரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். சம்வாதம் தொடரவில்லை. கொஞ்ச தூரம் போனதும் வழியில் ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
திடீரென்று மன்னர், அந்த உறங்கி கிடப்பவனை பார்த்து,” அறிஞரே, வெணிற ஆடை அணிந்துள்ளவரே, சோமரே, மன்னவரே, துயிலெழும்.” என்றார். அந்த மனிதர் அசையவில்லை.
மன்னர் பிறகு அவன் உடலைத் தொட்டு உலுக்கினார்.அவன் மெல்ல விழித்தான்.
மன்னர் கார்க்யரிடம் கேட்டார்,” உணர்வுள்ள இந்த மனிதன்,சாமானிய புத்திசாலியாகவும் தெரிகிறவன் உறங்கும்பொழுது எங்கேயிருந்தான்? அவன் பெயர் சொல்லி, குண நலன்களைச் சொல்லி கூப்பிட்டபொழுது எழாதவன் உடலை தொட்டவுடன் எப்படி எழுந்திருந்தான்?”
கார்க்யரிடமிருந்து பதிலேதும் வரவில்லை. மன்னரே தொடர்ந்தார்.
“உணர்வுடைய, புத்தியுடைய தன்னுடைய சுஷுப்தியில் தனது இதயத் தாமரையில் அவன் அடைக்கலம் புகுந்து விட்டான்;  அந்த நேரத்தில் அவனது மனமும் இந்திரியங்களும் அவனுடன் அடைக்கலமாகிவிட்டன. அந்த  நிலையில் அவன் எதையும் அறிவதில்லை. –ஆனால் அவன் உறங்கும்பொழுதும் கனவுகள் காணும்பொழுதும் அவன் அவனுடைய ஒரு தனி உலகிலிருக்கிறான். அவன் விழித்து இருக்கும்பொழுது பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் அந்த நிலையில் மன்னராகவோ செல்வந்தனாகவோ வாழ்கிறான்.”
அஜாத சத்ரு முடிக்கிறார்,” எல்லாவற்றிற்கும் ஒரே ஆதாரம், நமது உள்ளிலிருக்கும் உண்மைகளின் உண்மை( truth of the truth) .அதுவே ஒரு சிலந்தி போல் நூலிழைகளை கசித்து, நெருப்பிலிருந்து வரும் தீப்பொறிகள் போல் இந்திரியங்கள் .பிரபஞ்சத்தில் காணும் வித விதமான பொருள்கள், ஏன் கடவுளையும் கூட சிருஷ்டிக்கின்றது. அது ஜாக்ரத்திலும் சொப்னத்திலும் சுஷுப்தியிலும் நம்முள்ளேயிருக்கிறது.அது தான் எல்லார் உள்ளிலிருக்கும் பிரமன்”
இப்படி ஒரு நீண்ட சம்வாதத்தின் மூலம் பிரமனை அடையாளம் காண்பிக்கின்றது உபனிஷத்துக்கள்.
பூந்தானமோ நாலே வரியில் இதை கூறியுள்ளார்:
                         ஒன்னொன்னாயி நினைக்கும் ஜனங்கள்க்கு
                                                ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவுமாய்
                                                ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
                                                நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்

ஒன்றொன்றாய் –இது தான் பிரம்மமோ, இது தான் பிரம்மமோ என்ற் ஆராய்ந்து கடைசியில் அது நம்முள்ளே இருக்கும் ஒரே பொருள் தான், அதுவே இந்த விசுவ பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.ஆனால் அதற்கு எதனுடனும் ஒரு பந்தமுமில்லாமலிருக்கிறது. என்று காண்கிறோம் இது மிகவும் சிரமமான வழிதான். ஆகவே பகவன் நாமத்தைச் சொல்லி  பாடினால் தனாக நாம் அந்த பிரமனைப் போய் அடைந்து விடுவோம் என்கிறார் பூந்தானம்
நாமும் பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


.


                                               



Saturday 28 November 2015

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 10

ஞானப்பானா –கிருஷ்ண கீதை 10


அத்தியாயம் 10 -பிரம்மம்-2



கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே    


                                               


முன்னமிக்கண்ட விசுவமசேஷவும்   
ஒன்னாயுள்ளோரு ஜ்யோதிஸ்ஸ்வரூபமாய்
ஒன்னும் சென்னங்கு தன்னோடு பற்றாதெ
ஒன்னினும் சென்னு தானும் வலையாதெ


பிரம்மம் சுயம் பிரகாசமானது; அதற்கு ஈடு இணை வேறு எதுவும் கிடையாது; மற்றவையெல்லாம் மாயை அல்லது அவித்யையினால் உண்டான பொய்த் தோற்றங்களே. பிரபஞ்சத்தில் நம் மனோ விருத்தியினாலும் புத்தி சாதுரியத்தாலும் இந்திரியங்களின் தூண்டுதலினாலும் தோன்றியுள்ள சகல உயிருள்ள-உயிரில்லாத எல்லா பொருள்களும் பிகிருதியின் சத்துவ-ரஜோ-தமோ குணங்களினால் பாதிக்கப் பட்டிருக்கின்றன.இவையெல்லம் –பஞ்சபூதங்களினாலானவை என்றாலும்,அவைகளுடைய எந்த குணங்களும் பிரம்மத்தை பாதிப்பதில்லை.பிரம்மத்தால் படைக்கப் பட்ட ஜீவராசிகள் அனுபவிக்கின்ற சுக-துக்கங்கள் பிரம்மத்தை பாதிப்பதிலை.அது சாக்ஷி மாத்திரமாய் இருந்துகொண்டிருக்கும்.ஆகாசத்தில் மேகங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் தோற்றுவித்தாலும் ஆகாசம் எப்படி பாதிக்கப்படாமல் சாக்ஷி மாத்திரமாய் இருந்துகொண்டிருக்கிறதோ அது போல்..
இது யாருக்கு புரியும்? பிரம்ம்ம் இதுவா? அதுவா? என்று ஒன்றொன்றாய் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் “இல்லை, இல்லை” என்று கடைசியில் வந்து நிற்கின்ற நிலையில் பிரம்ம்மே நான் தான் அல்லது நானே பிரம்மம் என்ற உண்மை வெளியாகிறது.
அந்த நிலையில்,
                   ந தத்ர சூர்யோ பாதி, ந சந்த்ரதாரகம்
                   நேம வித்துதோ பாந்தி குதோயமக்னி
                   தமேவ பாந்தம் அனுபாதி சர்வம்
                   தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி
அங்கே சூரியனுமில்லை நிலவுமில்லை நக்ஷத்திரங்களுமில்லை.மின்னலும் வருவதில்லை.ஆனால் ஒளிமயமாக இருக்கிறது.எப்படி? பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் பிரம்மனுடைய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது.அங்கு அது மட்டும் தான்  உண்மையான ஒளி.
பிரம்ம சூத்திரம் கூறுகிறது:
                     ज्न्माध्यस् यत:
              ஜன்மத்யஸ யத
“அதுவே எல்லாவற்றிற்கும் ஆரமபம் மற்றுமாக இருக்கிறது.”
பிரம்மமே எல்லாவற்றிற்கும் ஆதியும் அந்தமுமாக இருக்கிறது.அதுவே சிருஷ்டி, சம்ரக்ஷணை, சமஹாரம் என்கின்ற மூன்று கர்மங்களையும் ஆற்றுகிறது.பிரம்மம் நித்தியமாக இருக்கிறது; அது புத்தியாக இருக்கிறது; அதுவே முக்தமாகவும் இருக்கிறது.அதுவே  எல்லாவற்றிற்கும் உற்பத்தி காரணமாகவும் இருக்கிறது.
அவ்வாறு ஸ்ருஷ்டி, சம்ரக்ஷணை, சம்ஹாரம் மூன்றையும் நிர்வகிக்ககூடியது ‘ஸர்வக்ஞானியாகவும் சர்வ வ்யாபியாகவும்” இருக்க வேண்டும்.
இந்த சூத்திரத்திற்கு ஆதாரம் தைத்திரீயோபனிஷத்தில் காணப்படுகின்றது.(III-i).
பிர்கு வாருணி தனது தந்தை வருணனை அணுகி, ‘தந்தையே, எனக்கு பிரம்மன் என்றால் என்ன என்று விளக்கிக் கூறவும்” என்று கேட்டதற்கு, வருணன் கூறினான்:” எங்கிருந்து நாம் காண்பவையெல்லாம் உற்பத்தியாயிற்றோ, ஏதோன்றின் சக்தியால் அவையெல்லாம் இங்கு இருந்து வருகிறதோ, அழிவில் அவையெல்லாம் ஏதொன்றில் போய் லயிக்கின்றதோ, அது தான் பிரமன் என்று அறிக என் மகனே”.
பகவத் கீதை அத்தியாயம் 10-ல்( விபூதி யோகம் )20 ஆவது சுலோகத்தில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்:
                 अहमाथ्मा गुडाकेश् सर्वभूताशयस्तित: !
                     अहमादिश्च मध्यम् च भूतानामन्त एव च !!
                 அஹ்மாத்மா குடாகேச ஸர்வபூதாஸ்யஸ்தித: !
                 அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச !!
‘குடாகேசா,எல்லா உயிரினங்களின் உள்ளே உறையும் ஆத்மா நானே;  அவைகளின் ஆதியும், நானே, இடையும் நானே; முடிவும் நானே.” இங்கு ‘குடாகேசா” என்ற பதம் மிகவும் பொருள் பொதிந்தது.குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் என்று பொருள். மாயையினால் உண்டான மயக்கத்தை வென்று உண்மையான நான் யார் என்று அறிந்து-உணர்ந்துகொள்ப்வனுக்கு பிரம்மத்தைக் குறித்துள்ள சந்தேகங்கள் இராது.
பூந்தானம் இதற்கும் ஒரு படி மேலே போய் ‘ஆதியில் அது ஜ்யோதி சொரூபமாயிருந்தது” என்கிறார்.
அதற்கும் பிரம்ம சூத்திரத்தில் ஆதாரம் இருக்கிறது.
                 ज्योतिश्चरणाभिधानात् !
ஜோதியே பிரமன் என்கிறது பிரம்ம சூத்திரம்-1.1.24

மேலும் பூந்தானம் கூறுகிறார்:

ஒன்னும் சென்னங்கு தன்னோடு பற்றாதெ

ஒன்னினும் சென்னு தானும் வலையாதெ


பிரம்மத்தை ஒன்றும் பாதிப்பதில்லை; அது எதையும் நாடுவதுமில்லை.
நாமெல்லாம் அந்த பிரம்மத்திலிருந்து தான் உற்பத்தியாகின்றோமென்றாலும், அந்த பிரம்மம் தான் நம்மையெல்லாம் சம்ரக்ஷிக்கின்றதென்றாலும், முடிவில் நாம் பிரமனோடு தான் லயிக்கின்றோமென்றாலும், நமது கர்மங்கள் எதுவும் பிரம்மனைப் பாதிப்பதில்லை.
பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்:

                                                मत्त: परतरम् नान्यत्किन्जदस्ति धनन्जय !

                                      मयि सर्वमिदम् प्रोतम् सूत्रे मणिगणा इव !!

                                    மத்த: பரதரம் நான்யத்கிஞ்சிதஸ்தி தனஞ்சய !

                                    மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ !!

                                     ப.கீ.அத்.7 சுலோ 7
‘எனக்கு மேலானது எதுவும் கிடையாது தனஞ்சயா; மணிகளை கோர்த்திணைக்கின்ற நூல் போல் நான் எல்லாவற்றினுள்ளிலும் இருந்து இணைப்புக்களை உண்டாக்குகின்றேன்.”
அதாவது உலகின் உற்பத்தி, ஒடுக்கம் எல்லாவற்றிற்கும் ஈசனே காரணம்.அவனுக்கு அன்னியமானது  வேறொன்றில்லை.அவன் நியதிகளை மாற்ற வல்லதும் வேறொன்றில்லை.இந்த உலகம் நிலை பெற்றிருப்பதும் அவனாலேயே தான். அந்த பிரமனை ஸூத்ராத்மன் என்றும் அழைக்கிறார்கள். ஸூத்திரம் என்றால் நூல். மணிகளும் முத்துக்களும் இரத்தினங்களும் நிறங்களிலும் குணங்களிலும் மாறுபடலாம்; ஆனால் அவைகளை இணைக்கின்ற நூல் ஒன்றே. அதன் குணமும் நிறமும் ஒன்றே.
அதை மேலும் விளக்கமாக பகவான்  அதே அத்தியாயம் 9 ஆவது  சுலோகத்தில் சொல்லுகிறார்                                        

                                                पुण्योग्न्ध: प्रुथ्वियाम् च तेजस्चास्मि विभावसौ !

                                      जीवनम् सर्वभूतेषु तपस्चास्मि तपस्विषु !!

                      புண்யோகந்த:  ப்ருத்வியாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவஸௌ !

                        ஜீவனம் ஸர்வபூதேஷு தபஸ்சாஸ்மி தபஸ்விஷு !!

                                                                        .கீ அத் 7 சுலோ 9

     “ மண்ணில் நறுமணமாகவும் ,அக்னியில் சுடராகவும், நானே இருக்கிறேன்.எல்லா உயிரினங்களுக்குள்ளும் உயிராகவும் தபஸ்விகளுக்குள் தவமாகவும் நானே இருக்கிறேன்.”மண்ணில் பலவித அழுக்குகள் சேர்ந்து பல வித மணங்களை உளவாக்கலாம்.ஆனால் மணங்களில் நறுமணம்- சத்தாக இருப்பது அந்த ஈசனே-அதாவது பிரமனே.அதே போல் அக்னி பல தோற்றங்களில் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றிலுமிருக்கும் ஒளியாக- சுடராக இருப்பது அந்த பிரமனே.ஒளி என்றால் ஆத்ம சைதன்யம்.       
மேலும் சொல்லப் போனால் பிரமன் எதையும் தேடிப் போவதில்லை. அவனவன் கர்மத்தின் பலனகளை அவனவனே தான் அனுபவிக்க வேண்டும்.இந்த ஜன்மத்தில் கர்ம பலன்கள் அனுபவித்து முடிவடையவில்லை என்றால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறாக்க வேண்டி வரும்.
இந்தக் கருத்துக்கள் பகவத் கீதையிலும் எதிரொலிக்கின்றது.

                                                ये च एव शात्विकाभावा: राजसा: तामसा: च येव !

                                      मद्-त: एव इथि तान् विद्-हि न तु अहम् तेषु ते मयि !!

                            யே சைவ ஸாத்விகாபாவா ராஜஸாஸ்தமஸாஸ்சயே !

                             மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி !!

“ சத்வ ரஜோ தமோ குணங்களுடையை எல்லா பொருட்களும் என்னிலிருந்து தோன்றியவை தான்.ஆனாலும் நான் அவைகளை சாரவில்லை;அவைகள் என்னை சார்ந்திருக்கின்றன.”
முக்குணமயமாகிய பிரபஞ்சம் பிரமனை ஆதாரமாக கொண்டுள்ளது. ஆனால் பிரமன் முக்குணப் பொருட்களை அதிஷ்டானமாக கொண்டவனில்லை. அவனது மாயா சக்தியால் உருவானது இந்த ஜகத். மாயையினால் ஆரோபிக்கப்பட்டுள்ள இந்த ஜகத் நம்மிலிருந்து மறைய வேண்டுமென்றால் பரமாத்மாவின் தரிசனம் பெற வேண்டும் அது தான் வாழ்வின் இலட்சியமும்.
அதை பெறுவதற்கு எளிதான வழி பகவத் நாம ஜபம் தான் என்கிறார் பூந்தானம்.நாமும் ஜபிப்போம்:

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!


 ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே   !!