ஞானப்பானா –கிருஷ்ணகீதை
5
அத்தியாயம் 5
மனிதரிலெத்தனை ரகம் !
இன்று (6 /09/23) கண்ணன் பிறந்த நாள். பாரத பூமியைகர்மபூமியாக- ஞானபூமியாக மாற்ற கண்ணன் பிறந்த நாள்.அந்த கண்ணனை போற்றி பாடுவோம்.
கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே
கண்டாலொட்டறியுன்னு
சிலரிது
கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே
கண்டொதுன்னுமே ஸ்த்யமல்லென்னது
மும்பே கண்டிட்டறியுன்னிது
சிலர்
“ சிலர் இந்த உண்மைகளை கண்ட பிறகு, புரிந்து கொள்கிறார்கள்;மற்று சிலரோ
தினமும் பார்த்துக் கொண்டிருந்தாலும் புரிந்து கொள்வதில்லை. சிலர் மட்டுமே தான்
காண்பது எதுவுமே சத்யமில்லை; எல்லாமே மாயை என்று முன்கூட்டியே தெரிந்து
கொள்கிறார்கள்.”
பூந்தானம் மனிதர்களை மூன்று விதமாக காண்கிறார். ‘காண்பது ஒன்றுமே உண்மையில்லை;
இந்த பிரபஞ்ச நடவடிக்கைகள் எல்லாமே மாயை என்று முன்கூட்டியே அறிந்தவர்கள் உத்தம
புருஷர்கள். அவர்களுக்கு பிரச்சினையே கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது;
விருப்பும் கிடையாது; வெறுப்பும் கிடையாது.அவர்கள் எப்பொழுதும் சாந்தியுடன்
இருக்கிறார்கள் அவர்கள் ‘அவித்யையின்’ -அறியாமையின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள். அவர்களை
முக்தர்கள் என்றும் சொல்லலாம்.
மத்திம ரகத்தை சேர்ந்தவர்கள் இரண்டாம் ரகம். அவர்கள் வாழ்வில் நடப்பதை கண்டு
பாடம் கற்றுக்கொள்கிறார்கள்; அனுபவங்கள் அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தின் மாயா
தத்துவத்தை கற்றுக்கொடுக்கிறது.அவர்கள் எவ்வளவு காலம் கழிந்து
கற்றுக்கொள்கிறார்கள் என்பது மனிதர்களுக்குள் வேறுபாடுகளை உண்டுபண்ணுகிறது.. சிலர்
மரணத்தின் வாயிலில் நிற்கும்பொழுது புரிந்து கொள்கிறார்கள்; சிலர் அதற்கு
முன்னேயே- சில-பல அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
மூன்றாம் ரகத்தை சேர்ந்தவர்கள் கடை நிலையை சேர்ந்தவர்கள் அவர்கள் கடைசி வரை
உண்மையை புரிந்து கொள்வதே இல்லை
இந்த விவேகம் அல்லது ஞானம் பகவத் நாம சங்கீர்த்தனத்தின் மூலமே பெற முடியும்
இதே கருத்தை மஹாபாரதத்தில் யுதிஷ்டிர- யக்ஷ சம்வாதத்தில் எதிரொலிக்க
காண்கிறோம்:
अहन्यहनि भूतानि
गच्चन्ति यमालयम्!
शेसाः स्थावरमिच्चन्ति
किम् आस्चर्यमतःपरम्!!
இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும்
ஆச்சரியமான விஷயம் எது என்ற யக்ஷனின் கேள்விக்கு யுதிஷ்டிரர் கூறுகிறார்:
அஹன்யஹனி பூதானி கச்சந்தி யமாலயம்
ஷெஶாஹ் ஸ்தாவரமிச்சந்தி கிம் ஆச்சர்யமதா:பரம்
“தினமும் நம்மைபோன்ற மனிதர்கள் இறப்பதை கண்டபிறகு,-யமபுரிக்கு இழுத்துச்
செல்வதை கண்டபிறகும் மனிதன் தான் மட்டு சாசுவதம், தனக்கு மட்டும் மரணம் கிடையாது
என்று நம்புவது தான் உலகிலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம்” என்று யுதிஷ்டிரன் பதில்
கூறுகிறான்.
‘சிலர்’ என்ற பதம் மூலம் பூந்தானம் முதல் இரண்டு ரகத்திலுள்ள மனிதர்கள் மிகக்
குறைவு என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
பட்டினத்தாரும் இதே கருத்தை வேறுவிதத்தில் கூறுகிறார்:
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெருமானைச் செம்பொன்னம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
மனிதா, நினை அந்த சிவ பெருமானை, பொன்னம்பலத்தில் வசிக்கும் சிவ பெருமானை நினை”
என்கிறார் பட்டினத்தார். பூந்தானம் குருவாயூரில் குடியிருக்கும் அந்த ஹரியை நினை என்கிறார்.
ஹரியும் ஹரனும் ஒன்றல்லவோ.! ஹரியையோ ஹரனையோ நினைத்தால் என்ன பயன்?
பட்டினத்தார் கூறுகிறார்:
பிறந்தன இறக்கும்,இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்,மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்,சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தனவுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
மேலே கூறிய உண்மைகள் பகவன் நாமம் உச்சரித்த மாத்திரத்திலேயே உங்களுக்கு
புலனாகும்.
ஆகவே,
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ்சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே
பூந்தானம் கிருஷ்ணனை நினைக்கச் சொல்லுகிறார்.
நாமும் குருவாயூரப்பனை பூந்தானத்தோடு சேர்ந்து நினைப்போம்.
No comments:
Post a Comment